தேவையானவை - மேல் மாவுக்கு: பச்சரிசி மாவு - 2 கப், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
பூரணத்துக்கு: பாசிப்பயறு - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். அதில்... உப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவும். கொதிக்கும்போதே, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி, கட்டியில்லாமல் நன்கு கிளறவும். மாவு கெட்டியானதும் இறக்கி, 10 நிமிடம் ஈரத் துணியால் மூடி வைக்கவும்.
பாசிப்பயறை 6 மணி நேரம் ஊற வைத்து, பின் வேக விடவும். வெந்ததும் தண்ணீரை வடித்து, உப்பு, மிளகாய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும். பூரணம் ரெடி!
தயார் செய்து வைத்துள்ள மேல் மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து, கிண்ணம் போல் செய்து கொள்ளவும். அதனுள் பாசிப்பயறு பூரணத்தை வைத்து மூடவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து கொள்ளவும். அவற்றை ஆவியில் வேக விட்டு எடுத்தால்... பாசிப்பயறு கொழுக்கட்டை தயார்!
வேக வைத்த பயறுக்கு பதிலாக முளைகட்டிய பயறையும் பயன்படுத்தலாம்; இந்த கொழுக்கட்டையை காராமணியிலும் செய்யலாம்.