சோயாபீன்ஸ் தோசை
தேவையானவை: சோயாபீன்ஸ் - ஒரு கப் (10 மணி நேரம் ஊற வைக்கவும்), புழுங்கல் அரிசி - ஒரு கப் (ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்), வெந்தயம் - ஒரு டீஸ்பூன் (அரிசியுடன் சேர்த்து ஊற வைக்கவும்), உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஊறிய சோயாபீன்ஸை அரைக்கவும். பிறகு... அரிசி-வெந்தயத்தை அரைத்துக் கொள்ளவும். இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து, உப்பு சேர்த்து ஒரு இரவு முழுவதும் புளிக்க வைக்கவும். சூடான தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை விட்டு தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.
இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி சிறந்த காம்பினேஷன்!

ஜவ்வரிசி தோசை
தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், புழுங்கல் அரிசி - ஒன்றரை கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது), இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியைக் கழுவி, தண்ணீரை நன்கு வடிகட்டி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். அவ்வப்போது இதனைக் கிளறினால்தான் முழுமையாக ஊறும். புழுங்கல் அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, நன்கு கழுவி அரைக்கவும். அரிசி நன்கு அரைபட்டவுடன்... ஜவ்வரிசி, உப்பு சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். மாவை இரண்டு மணி நேரம் புளிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மாவில் கொட்டிக் கலக்கவும்.
தோசைக் கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து, மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து, வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.
புதினா சட்னியுடன் சாப்பிட்டால், டேஸ்ட் கூடுதலாக இருக்கும்!

சோள தோசை
தேவையானவை: வெள்ளைச் சோளம், பச்சரிசி - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு - இரண்டு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெள்ளைச் சோளம், பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தனித்தனியாக அரைக்கவும். பிறகு, எல்லா மாவையும் ஒன்றாக கலந்து, உப்பு சேர்க்கவும். இந்த மாவை, 10 முதல் 12 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும். சூடான தோசைக் கல்லில், எண்ணெய் தேய்த்து, ஓரத்தில் இருந்து உள்பக்கம் வரும் வகையில் மாவை விடவும். இருபுறமும் எண்ணெய் விட்டு, திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.
இதற்குத் தொட்டுக்கொள்ள காய்கறி குருமா சூப்பராக இருக்கும்!